தமிழில் ஃப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.
மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன், மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
திருவான்மியூரில் இருக்கும் விஜயலட்சுமி சமீபத்தில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை முயற்சிக்கு முன்னர் விஜயலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ‘நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காவும்தான் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அந்த எண்ணம் இல்லை.
என்னை, ஹரி நாடார் நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறி இழிவாக பேசினார். மேலும், என்னுடைய சாதி குறித்தும் பேசினார்.
சீமான் மீதும், ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமியிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, தன்னை சிகிச்சை முடிவதற்கு முன்பாகவே மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விஜயலட்சுமி பேசுகையில், ‘எதுவும் நாடகமில்லை. மலர் மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றினார்கள். மூச்சு வாங்குவதில் சிரமம் இருக்கிறது. இன்னும் நான் குணமடையவில்லை.
என்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தமிழக மக்களிடமும் ஊடகங்களிடமும் தெரிவிக்க வேண்டும் என்பதால் தான் பேசுகிறேன்.எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. காயத்ரி ரகுராம் எனக்கு உதவினார்.
ஆனால் அவர் தற்போது என்னுடன் இல்லை. சீமான் நான் பாஜகவிடம் காசு வாங்குவதாக சொல்கிறார். ஆனால் எனக்கு சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிவிட்டார்கள். ஹரி நாடார் சீமானுக்காக என் நாக்கை அறுத்துவிடுவேன் என்று சொல்கிறார்.
ஒரு பெண்ணை இந்த அளவுக்கு துன்புறுத்துவதற்கு எப்படிதான் மனது வருகிறதோ என்று தெரியவில்லை. நான் உணவு உண்ணாமல் கூட போராட்டம் நடத்தத்தயார்.
சீமானின் அக்கிரமங்களுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏன் அவசர அவசரமாக சிகிச்சை அளிக்காமல் என்னை வெளியேற்றினார்கள் என்பதே எனக்கு தெரியவில்லை.
அன்று என்னுடன் இருந்த காயத்ரி ரகுராம் இப்போது என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும்போது என்னுடன் இல்லை’ என்று கூறியுள்ளார்.
மேலும், சீமான் வாய்திறக்காமல் இருப்பதால் பிரச்னை முடிவுக்கு வராது; என்னிடம் பேசினால், பிரச்னை சுமூகமாக முடியும் என்று விஜயலட்சுமி தெரிவித்தார்.